என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள்
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
- தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை:
மண்டல பூஜை - மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டும் 17-ந் தேதி (இன்று) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் TNSTC எனப்படும் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94450-14452, 94450-17793 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






