என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

களியக்காவிளை அருகே சொகுசு பஸ்சில் கடத்திய ரூ. 22 லட்சம் பறிமுதல்- வாலிபர் கைது
- தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி பஸ்சில் பணம் கொண்டு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
களியக்காவிளை:
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி பஸ்சில் பணம் கொண்டு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வினோஜ் தலைமையிலான போலீசார் கொற்றாமம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். வாலிபர் கையில் பேக்கும் வைத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
சந்தேகமடைந்த போலீசார் பேக்கை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த பேக்கை பறிமுதல் செய்தனர். வாலிபரையும் கைது செய்து, அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ.22 லட்சம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் பணம் குறித்த விவரங்களை வாலிபரிடம் கேட்டறிந்தனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
பிடிபட்ட வாலிபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ பிரவீன் குமார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






