search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அரிசிபாளையத்தில் செங்கலால் தாக்கி ரவுடி படுகொலை- 5 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    கொலை செய்யப்பட்ட யோகேஸ்வரன்.

    சேலம் அரிசிபாளையத்தில் செங்கலால் தாக்கி ரவுடி படுகொலை- 5 பேரிடம் போலீசார் விசாரணை

    • யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர்.
    • காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் அவ்வை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவரது நண்பர் பிரபாகரன் (25).

    ரவுடிகளான இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று யோகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் ரவியை கொலை செய்யும் நோக்கில் அரிசிபாளையம் காதர்பாட்சா தெருவுக்கு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரவியிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், ரவியை சரமாரியாக தாக்கினர்.

    இதனை பார்த்த ரவியின் உறவினர்கள் மற்றும் அவரது 3 மகன்களும் சேர்ந்து யோகேஸ்வரன் மற்றும் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். செங்கலால் தாக்கப்பட்ட யோகேஸ்வரன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    தொடர்ந்து ரவியின் உறவினர்கள், அவரை தாக்கியதால் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரவியின் உறவினர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    இறந்தவரின் உறவினர்கள் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். யோகேஸ்வரன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த ரவி, பிரபாகரன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யோகேஸ்வரனை தாக்கியதாக ரவியின் மகன்கள் 3 பேர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த புத்தாண்டு அன்று அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பிரபாகரன் தான் ஜெயிலுக்கு செல்ல ரவி தான் காரணம் என நினைத்து அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரவியை பழிவாங்க வேண்டும் என்று கருதிய பிரபாகரன், நேற்று நண்பர் யோகேஸ்வரனுடன் அரிசிபாளையம் வந்த நிலையில் அங்கு ரவியின் உறவினர்கள் தாக்கியதில் யோகேஸ்வரன் இறந்ததும் பிரபாகரன் காயம் அடைந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×