search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் நிறுவன இயக்குனர் கைதாகி ஜெயிலில் அடைப்பு
    X

    தனியார் நிறுவன இயக்குனர் கைதாகி ஜெயிலில் அடைப்பு

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×