search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 9-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்
    X

    காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 9-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்

    • கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரும், வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி. மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்பவரும் கடந்த 10 ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த மே 5-ந் தேதியன்று பவித்ராவை அழைத்து சென்ற மோகன்ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கடந்த 5 மாதமாக சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் மனைவி பவித்ராவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.

    இதனால் 3 மாத கர்ப்பிணியான பவித்ரா வேலாக்கவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்கவிடாமல் பவித்ராவை தடுத்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வெயில், மழை என எதற்கும் அஞ்சாமல் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    மேலும் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×