search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசுத்தொகுப்பு 97 சதவீதம் பேருக்கு வினியோகம்
    X

    பொங்கல் பரிசுத்தொகுப்பு 97 சதவீதம் பேருக்கு வினியோகம்

    • பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.
    • பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    எந்தவித விமர்சனமும் ஏற்படாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு தேவையான தரமான பச்சரிசி தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் மூலம் விரைந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    மொத்தம் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரர்களில் 2 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 791 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 99 சதவீதமும், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் 98 சதவீதமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக குறைந்தபட்சமாக தென்சென்னையில் 94 சதவீதம் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்னும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 332 பேருக்கு மட்டுமே பரிசு தொகுப்பு வழங்க வேண்டியது உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர் சென்ற காரணத்தினால்தான் பரிசு தொகுப்பை வழங்க முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசி, கரும்பு ஆகியவை நல்ல தரமானதாக இருந்ததாக அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

    குறிப்பாக பச்சரிசி எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் தரமானதாக இருந்ததாக பாராட்டுகள் குவிகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×