search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் தி.மு.க. பிரமுகர் வீடு, காரில் பெட்ரோல் குண்டுவீச்சு

    • நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
    • தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள சாரோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரது வீட்டு மாடியில் நேற்று சங்கர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ பிடித்து எரிந்தது.

    சத்தம் கேட்டு சங்கர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். காரின் இருக்கைகள், கதவு பகுதிகள் எரிந்து கருகியது.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் சங்கர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×