search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயில் குறைப்பால் பரிதவிக்கும் பயணிகள்
    X

    செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயில் குறைப்பால் பரிதவிக்கும் பயணிகள்

    • தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
    • பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்களில் முக்கிய போக்குவரத்தாக புறநகர் ரெயில் சேவை உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக மின்சார ரெயில்சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

    இதேபோல் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரெயில் சேவையை அதிகரிக்கும் வகையில் 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரெயில்பாதை கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் வழக்கமாக இயக்கப் பட்ட ரெயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் ரெயில் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 90 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது 83 ஆக குறைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ தகவலை ரெயில்வே அறிவிக்க வில்லை. எனினும் குறைந்த அளவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கல்பட்டு-தாம்பரம் வழித்தடத்தில் 45 மின்சார ரெயில் சேவை, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்திற்கு 45 ரெயில் சேவை கள் இயக்கப்பட்டன. பின்னர், பராமரிப்பு பணி கள் காரணமாக ரெயில் சேவைகள் குறைக்கப் பட்ட தாக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 42 ெரயில்களும், செங்கல்பட் டில் இருந்து தாம்பரத்திற்கு 41 ரெயில்களும் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிக ரிக்கப்படவில்லை. இதனால் மக்கள்அதிகம் பயன்படுத்தும் வழித்தடத்தில் 83 ரெயில் சேவைமட்டுமே உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பரித விக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ள தால் அதிகமானோர் மின்சார ரெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணி கள் சென்னை நகர் பகுதியில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வாகனங்களில் செல்ல கூடுதல் செலவு மற்றும் பயணநேரம் அதிகம் உள்ளிட்ட காரணங்களால் ரெயில் சேவை பயணம் மேலும் உயர்ந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பஸ்பயணிகள் தற்போது வண்டலூர், மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்களில் இறங்கி செல்கிறார்கள். அதிகாலை நேரத்தில் மாநகர பஸ்போக்குவரத்து போதிய அளவில் இல்லாதததும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    ஏற்கனவே மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் பயணிகள் கூட்டத்தால் ஊரப்பாக்கம், பொத்தேரி ரெயில் நிலையங்களிலேயே ரெயில் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காலை நேரங்களில் வழக்கமாக சென்னை நகருக்குள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்லும் பய ணிகள் கடற்கரை மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலில் செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.

    அவர்கள் கூட்ட நெரிசலை கண்டு அடுத்த மின்சார ரெயிலில் காத்திருந்து ஏறினாலும் அதே அளவு கூட்டம் வருவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போது, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை தயார் நிலையில் இருந்தபோது செங்கல்பட்டுக்கு மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது 3-வது ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் ரெயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை மாலை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் இதுபற்றி தெரியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். ரெயில்நிலையங்களில் இது போன்று ரெயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றங்கள் குறித்து தெரிவிக்க எந்த அறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க ரெயில்வே கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பயணிகளை பற்றி ரெயில்வே துறையினர் கவலைப்பாடாமல் அவர்கள் விரும்பியபடி ரெயில் சேவைகளை இயக்குகின்றனர் என்றனர்.

    Next Story
    ×