search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

    • பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.
    • நட்சத்திர ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இதற்கான தேர்தல் தேதி அனேகமாக மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மேற்கொண்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

    அந்த வகையில் தமிழ் நாட்டில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அறியவும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் கமிஷனர்கள் அஜய் பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலாளர் மலேய்மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள 'டிரைடண்ட்' நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.

    முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் சென்று தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்து அதை மனுவாகவும் கொடுத்தனர்.

    முக்கியமான கோரிக்கையாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

    பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகளில் துணை ராணுவப்படையை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தினார்கள்.

    இன்றைய இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

    அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் டி.ஜி.பி. பாலச்சந்திரன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் வக்கீல் பிரிவு தலைவர் சந்திரமோகன், ஆம் ஆத்மி கட்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, ஸ்டெல்லா மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆறுமுக நயினார், சம்பத், தேசிய மக்கள் கட்சியில் மாநில தலைவர் சீனிவாசன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் 2 பேர் வீதம் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து தங்களது கருத்துக்களை கோரிக்கை மனுவாக வழங்கினார்கள்.

    ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் 9 நிமிட நேரம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பகல் 11.39 மணி வரை நடந்தது.

    ஒவ்வொரு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் மீண்டும் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஏற்பாடுகள் எந்த அளவில் தயார் நிலையில் உள்ளது என்பதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆய்வு மேற்வார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், மின்னணு எந்திரங்கள் கையிருப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து நாளையும் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×