என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    500-க்கு 185 மார்க் வாங்கி தேர்ச்சி பெற்ற மகனை கேக் வெட்ட வைத்து கொண்டாடிய பெற்றோர்
    X

    500-க்கு 185 மார்க் வாங்கி தேர்ச்சி பெற்ற மகனை கேக் வெட்ட வைத்து கொண்டாடிய பெற்றோர்

    • மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தராது என்பது உண்மை.
    • தேர்வில் அதிக மார்க் வாங்கியவர்கள் வாழ்க்கையில் தோற்றதும் உண்டு.

    பரமக்குடி:

    தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது, தோல்வி அடைந்துவிட்டோம் என கருதி மனம் உடையும் மாணவர்கள் பலர்.

    மதிப்பெண் ஒன்றுதான் வாழ்க்கை என்ற தவறான எண்ணத்தில், விபரீத முடிவெடுத்து மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் எடுக்கவில்லை என பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து தற்கொலை செய்தவர்களும் உண்டு. குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக பெற்றோர் திட்டியதால் உயிரை மாய்த்தவர்களும் உண்டு.

    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தராது என்பது உண்மை. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிற்காலத்தில் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு வந்ததும் உண்டு. தேர்வில் அதிக மார்க் வாங்கியவர்கள் வாழ்க்கையில் தோற்றதும் உண்டு.

    தங்கள் மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், பாஸ் ஆகிவிட்டான். ஆனால், 4 பாடங்களில் 100-க்கு தலா 35 மார்க்தான் வாங்கி இருக்கிறான். அவனது மொத்த மதிப்பெண் 500-க்கு 185-தான் என நினைத்து, அந்த மாணவனின் பெற்றோர் வருத்தம் அடையவில்லை. அதுவும் ஒரு சாதனைதான் என நினைத்து மகனை கொண்டாடி இருக்கிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடு என உற்சாகப்படுத்தி உள்ளனர்.

    அந்த மாணவனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்துவந்தார். 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும், அறிவியலில் மட்டும் 45 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவனின் பெற்றோர் மகன் தேர்ச்சி அடைந்ததை நினைத்து மகிழ்ந்தனர். உறவினர்கள், நண்பர்களை அழைத்து விழா எடுத்தனர். மகன் கையால் கேக் வெட்டி, அவனுக்கு ஊட்டிவிட்டு கொண்டாடினர். இதுசம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×