என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: போலீசார் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும்.
- பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் காவல் துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கும் பொருட்டு, மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தமிழக மக்களைக் காக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழகக் காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






