search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்டவாளத்தில் நின்றது- யானையால் 15 நிமிடம் நிறுத்தப்பட்ட மலை ரெயில்
    X

    தண்டவாளத்தில் நின்றது- யானையால் 15 நிமிடம் நிறுத்தப்பட்ட மலை ரெயில்

    • ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.
    • 15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலும், அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    வாகனங்களில் செல்வதை விட மலை ரெயிலில் செல்லும்போது நேரம் அதிகமானாலும் இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே விரும்புபவர்கள். ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.

    சில சமயங்களில் யானைகள் தண்டவாளத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று விடும். அந்த சமயம் மலை ரெயில் நிறுத்தப்பட்டு யானைகள் சென்றபிறகே ரெயில் புறப்பட்டுச் செல்லும்.

    இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக 3 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. நேற்று குன்னூரில் இருந்து மலைரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 காட்டு யானைகளும் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதனால் ரெயில் என்ஜின் டிரைவர்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். 15 நிமிடம் யானைகள் தண்டவாளத்தை விட்டு நகராமல் நின்றது. அதன்பிறகு தான் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடையை கட்டியது. பின்னர் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது.

    15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×