search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சருக்கு நகராட்சி-மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர், அலுவலர் சங்கம் நன்றி
    X

    முதலமைச்சருக்கு நகராட்சி-மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர், அலுவலர் சங்கம் நன்றி

    • நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பூந்தமல்லி:

    தமிழ்நாடு நகராட்சி - மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு தமிழக முதலமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் அப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒரே துறையில் பணியாற்றிய போதும் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும், மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மண்டல அளவில் துப்புரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.

    நகராட்சிகளில், மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர்நல மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பணிகளும், துப்புரவு அலுவலர்களுக்கு பொது சுகாதார பணிகளையும் ஒதுக்கி பணி பகிர்வு செய்திட வேண்டும்.

    பல நகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நகர்நல அலுவலர் பணியிடமும் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இதனால் பணி பகிர்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சிகளின் திடக்கழிவு மேலாண் பணிகளை பொது சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவர்களை கொண்டு கவனிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்கெனவே சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனப்படும் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிந்து வரும் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை மூலம் நகர்ப்புற மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு அவற்றில் புதியதாக 500 சுகாதார ஆய்வாளர்களை (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) நியமித்து உள்ளனர். இதனால் ஒரே நகர்ப்பகுதிகளில் இரு துறைகளின் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது.

    இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சுகாதார ஆய்வாளர்களான சானிடரி இன்ஸ்பெக்டர்கள் பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார ஆய்வாளர்களின் பணி குறுக்கீடு ஏற்படும். துப்புரவு அலுவலருக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய, பொது சுகாதார பணிகளைக் கவனிக்க, ஜீப் வாகனம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துப்புரவு அலுவலர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும் என்றும் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், செயலாளர், செந்தில்ராம் குமார், பொருளாளர் இளங்கோ, தலைமையிடத்து செயலாளர் கோவிந்த ராஜூ ஆகியோர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர். கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நகராட்சி நிர்வாக இயக்குநர், கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விஜயகுமார் உடனிருந்தார்.

    Next Story
    ×