என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்- முதலமைச்சர் நாளை ஆலோசனை
- வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
- அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன. குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக்கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இதில் பயன் அடைய உள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் குடும்ப தலைவி யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
குடும்ப தலைவிகளில் யார்-யாருக்கு ரூ.1000 வழங்க முடியும் என்பதை இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் அனைத்து கலெக்டர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பி உள்ளார்.
அதே சமயத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தாசில்தார்கள், ஆர்.டி.ஓ.க்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகராட்சி, நகராட்சி, ஆணையர்கள், கூடுதல் கலெக்டர்கள், காணொலி வாயிலாக கூட்ட அரங்கில் அமர்ந்து முதல்-அமைச்சர் பேசுவதை கவனிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, நாளை நடைபெறும் கூட்டத்தில் குடும்பத் தலைவிகள் யார்-யாருக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.