search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் இன்று மாலை கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
    X

    திருவண்ணாமலையில் இன்று மாலை கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    • திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.
    • கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.

    இதுவரை இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 7.26 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். 2 லட்சம் கற்பிக்கும் தன்னார்வலர்கள், 34 லட்சம் கற்கும் மாணவர்கள் உள்ளனர். இந்த திட்டத்தில் தினமும் 3 லட்சம் மணி நேரம் கற்பிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதையடுத்து திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாக 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக உள்ளது.

    கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    தொடர்ந்து நாளை காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1,103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பல்வேறு துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.

    இதில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.674 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ரூ.429 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×