search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வை ஒழித்து உதயநிதி ஸ்டாலின் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்: அமைச்சர் துரைமுருகன்
    X

    நீட் தேர்வை ஒழித்து உதயநிதி ஸ்டாலின் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்: அமைச்சர் துரைமுருகன்

    • ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு.
    • கலைஞரின் வேகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அந்த அனுபவம் அமைச்சர் உதயாவிடம் இருக்கிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    3 தலைமுறையாக நான் கோபாலபுரத்துடன் ஐக்கியமாகி உள்ளேன். இரு பெரும் தலைவர்களுடன் வருங்கால தலைவராக இருக்கக் கூடிய உதயாவையும் பாராட்டி பேசுவது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பல்ல. அந்த வகையில் நான் இங்கு வாழ்த்தி பேச கடமைப்பட்டுள்ளேன். நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மாணவர்கள் பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து நீதிக்காக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே ஒரு அறப்போராட்டம் தான் உண்ணாவிரதப் போராட்டம்.

    நீட் தேர்வு என்ற கொடிய சட்டத்தை மாணவர்கள் முதுகில் சுமத்தி அவர்களை நிமிரவிடாமல் செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டர் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. நீண்ட நாட்களாக போராடி வருகிறது. மாணவர்களும் இதை எதிர்த்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். இதற்கு முன்பு தி.மு.க.வில் பல பேர் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் விட்டனர். பல மாணவர்களும் இந்தி திணிப்பை எதிர்த்து உயிர் இழந்துள்ளனர்.

    அந்த வழியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களாகிய இளம் சிட்டுகள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி மத்தியில் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வரலாற்றை பார்த்தால் இந்தியை திணித்த ஆட்சி ஒழிந்தது. அதை போல் நீட்டை எதிர்த்து பலர் விடுகிற சாபம் ஆட்சியை ஒழித்துவிடும்.

    நீட் தேர்வை நாம் மட்டும்தான் எதிர்ப்பதாக பலர் பேசுகிறார்கள். ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்டது நீட் தேர்வு. இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வால் இழந்து உள்ளனர்.

    இன்று நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல்வாதிகள் மட்டுமல்ல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று இளைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைவராக உள்ள அமைச்சர் உதயநிதி நீட்டை ஒழித்துகட்டும் வரை இளைய சமுதாயம் ஓயாது என சபதம் எடுத்துள்ளார்.

    அவர் தாத்தா கலைஞரை போல் வேகமாக செயல்படும் ஆற்றல் படைத்தவர். அதை நான் பலமுறை பார்த்துள்ளேன். இந்த அறப்போராட்டத்தை பொறுத்தவரை ஏதோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம் என்று இல்லாமல் பல தொடர் போராட்டங்களை அமைச்சர் உதயா அறிவிப்பார். நீட் தேர்வு ஒழிந்தது அதற்கு காரணம் உதயநிதிதான் என சரித்திரத்தில் ஒருநாள் இடம்பெறும்.

    கலைஞரின் வேகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டமிட்டு பணியாற்றுகிற அந்த அனுபவம் அமைச்சர் உதயாவிடம் இருக்கிறது. இந்த இயக்கத்தில் நான் 3 தலைமுறையை பார்த்தவன். நீட்டை பொறுத்தவரை அவரால்தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நினைக்கிறேன். எனவே அவரது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×