search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
    X

    80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.
    • அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலர்ச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற கலைஞரின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

    பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி உள்ளார். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.

    தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.

    அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 22 ஆயிரத்து 931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×