search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆந்திர விவசாயிகள் மீண்டும் தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்தது
    X

    ஆந்திர விவசாயிகள் மீண்டும் தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்தது

    • ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம்.
    • பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 4-ந் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

    ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம். அவர்கள் அதிகமாக தண்ணீர் எடுக்கும்போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறையும்.

    சமீபத்தில் அதிகப்படியான கிருஷ்ணா தண்ணீர் எடுத்ததால் நீர்வரத்து குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் விவசாயிகள் தண்ணீர் எடுக்கவில்லை.

    இதனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது விவசாயிகள் மீண்டும் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 110 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 27. 63 அடியாக பதிவானது. 1.252 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கன அடி வீதம் பேபி கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 45 நாட்களில் இதுவரை 1½ டி.எம்.சி. தண்ணீர் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×