என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பணிக்கு சேர்ந்த 3 ஆண்டுகளில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை
- தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு தான் போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
திருச்சி மாவட்டம், உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகள் கவிப்பிரியா (வயது 27). இவர் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மதியம் வழக்கம்போல் சாப்பிடுவதற்காக தான் தங்கி இருந்த போலீஸ் குடியிருப்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக போலீசார் கவிப்பிரியாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனையும் எடுக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர்.
அந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு கவிப்பிரியா துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
மேலும், இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கவிப்பிரியா கடந்த 2020-ம் ஆண்டு தான் போலீஸ் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.






