என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாத்தூர் அருகே கோர விபத்து: கார் கவிழ்ந்து தாய், மகன், மகள் பலி
- 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சாத்தூர்:
நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னார்புரத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் ராஜா (வயது 49). இவருக்கு மெர்லின் (44) என்ற மனைவியும், ரோஷினி (15) என்ற மகளும், ரோகித் (13) என்ற மகனும் இருந்தனர்.
ரிச்சர்ட் ராஜா கோயம்புத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி உள்ளிட்டவைகளின் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் ராஜா தனது குடும்பத்துடன் திசையன்விளைக்கு காரில் வந்தார். நேற்று இரவு அவர்கள் காரில் மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர். காரில் ரிச்சர்ட் ராஜா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள், சகோதரர் ஜான்சன் (56) ஆகியோர் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவர்களது கார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. நல்லிசத்திரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கடைசியில் கார் தடுப்புச்சுவரில் மோதி அதே வேகத்தில் தலைக்குப் புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ரிச்சர்ட் ராஜாவின் மகன் ரோகித் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய மற்ற 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே மெர்லின், ரோஷினி ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். ரிச்சர்ட் ராஜா, ஜான்சன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






