search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வால்பாறை, காரமடையில் கொட்டி தீர்த்த மழை- மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
    X

    வால்பாறை, காரமடையில் கொட்டி தீர்த்த மழை- மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமா காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காலையில் சூரியன் சுட்டெரித்ததுடன், பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது.

    மாலையில் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் காரமடை-வெள்ளியங்காடு சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் மின்வாரிய அதிகாரிகள் சாலையில் விழுந்திருந்த மின் கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காரமடையிலிருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காரமடையில் இருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு செல்லும் வாகனங்கள் மங்களக்கரைபுதூர் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

    வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    காலை முதலே இதமான கால நிலை நிலவிய நிலையில் மழை பெய்தது. பள்ளி விடும் நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்தனர்.

    ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வால்பாறையில் குவிந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

    திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

    Next Story
    ×