என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழை எதிரொலி: நீலகிரி 4 தாலுகா, தென்காசி 5 வட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
- உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
நீலகிரி:
தென்மேற்கு பருவமழை காரணமாக தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, கடையம், கீழப்பாவூர், செங்கோட்டை ஆகிய 5 வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் துரைரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.






