search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் தம்பதி கொலை: புதுப்பெண்ணின் தந்தை- 2 வாலிபர்கள் சிக்கினர்
    X

    காதல் தம்பதி கொலை: புதுப்பெண்ணின் தந்தை- 2 வாலிபர்கள் சிக்கினர்

    • மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24).

    இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதற்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 30-ந்தேதி அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஊரக துணை சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் அங்கு வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது தந்தை முத்துராமலிங்கம் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மாரிச்செல்வம் கடந்த 30-ந்தேதி கார்த்திகாவை கோவில்பட்டி அழைத்து சென்று திருமணம் செய்தார். புதுமண தம்பதி கோவில்பட்டியில் 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் நேற்று காலை முத்துராமலிங்கம் வசிக்கும் அதே திரு.வி.க. நகரில் உள்ள மாரிச்செல்வம் உறவினர் வீட்டுக்கு 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றதை பார்த்து முத்துராமலிங்கம் ஆத்திரம் அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது உறவினர்களின் மகன்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தூண்டுதலின்பேரில் 6 வாலிபர்கள் சேர்ந்து நேற்று இரவு முருகேசன் நகரில் உள்ள வசந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மாரிச்செல்வமும், கார்த்திகாவும் தனியாக இருந்துள்ளனர். உடனே அவர்களை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் கொலையில் தொடர்புடைய 2 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகேசன் நகர், திரு.வி.க. நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×