search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கல்லணையில் இருந்து 16-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறந்த சமயத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. ஆனால் அதன் பிறகு அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.16 அடியாக உள்ளது. ஆனால் இதே நாளில் கடந்த ஆண்டு 120 அடியில் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து கர்நாடக அரசு வழங்காமல் உள்ளது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற மன்ற தீர்ப்பை மதிக்காமல் அவமதிப்பு செய்யும் கர்நாடக அரசை கண்டித்தும், உரிய நீரை வழங்கிட வலியுறுத்தியும் தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உட்பட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினரோடு ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி கருகி வரும் குருவே பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட குழு நிர்வாகிகள் குருசாமி, இளங்கோவன், சரவணன், வசந்தி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை மாவட்டத்தை போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் குறுவை பயிர்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 15 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டன.

    அதனை விவசாயிகள் வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்யும் மழையால் விவசாயிகள் அறுவடை பணியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறையை அடுத்த மணக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் இந்த மழையால் வயலில் சாய்ந்து முளைக்கும் தருவாயில் உள்ளது.

    ஆனால் தொடரும் மழையின் காரணமாக இப்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் அவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், பாதிப்புக்கு உள்ளான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சில இடங்களில் விவசாயிகள் விரக்தியின் உச்சிக்கே சென்று சாகுபடி செய்த பயிர்களை டிராக்டர்கள் மூலம் அளித்தனர்.

    இவ்வாறாக டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×