search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: வேட்பாளர் 30-ந்தேதி அறிவிப்பு
    X

    அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: வேட்பாளர் 30-ந்தேதி அறிவிப்பு

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கூட்டணி கட்சியான த.மா.கா.வும் கலந்து கொண்டது.

    காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 வரை நடைபெற்றது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளதால் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழு மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அ.தி.முக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் ஒவ்வொரு வார்டாக வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் முன்னிலையில் கள நிலவரம் குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சின்னம் தொடர்பான தீர்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கு பாடுபடுவோம் என்பதே எங்களது இலக்கு. எனவே வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×