search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மது குடித்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு: எடப்பாடி தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு
    X

    உயிரிழந்த சேகரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி - ( உள்படம்) மது குடித்து உயிரிழந்த சேகர்

    மது குடித்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு: எடப்பாடி தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு

    • சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.
    • சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சி கல்லப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை அருகே அரசு மதுபான கடையும், அதன் அருகில் மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மதுபான பாரில் சேகர் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சேகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சேகரின் உறவினர்கள் அங்கு திரண்டனர். உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இந்த நிலையில் சேகர் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மேலும் ஒரு நபர் நீண்ட நேரமாக மதுபோதையில் சுயநினைவு இன்றி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், நானும், சேகரும் பாரில் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கவில்லை. அவர் யார்? என எனக்கு தெரியாது. வழக்கம்போல் நான் இங்கு மது குடிக்க வருவேன். அதுபோல் நேற்று இங்கு வந்து மது குடித்தேன். போதை தலைக்கேறியதால் நடக்க முடியாமல் பார் அருகில் படுத்துவிட்டேன், என்றார்.

    பின்னர் அந்த நபர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேகர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மது குடிக்கக்கூடாது என டாக்டர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவு அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என முழு விபரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சேகர் சொந்த ஊரான கல்லப்பாளையம் காலனி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவி வருவதால் சேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனிடையே அவரது உறவினர்கள், சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதால், மது வாங்கி குடித்த அரசு டாஸ்மாக் கடையில் உள்ள மது வகைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பாரில் உள்ள உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×