search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
    X

    சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

    • சிலந்தி ஆற்றில் அணை கட்டினால், அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படும்.
    • திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின், எந்த தடுப்பணையும் கட்டவில்லை.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன். இவர் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    கோவை கணபதி மாநகரில் உள்ள பாரதி நகரில் உள்ள மலரவன் வீட்டிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தார்.

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    அவர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மலரவன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

    அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். இதன் காரணமாக அந்த பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள்.

    எனவே சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடுப்பணை கட்டுவதை தடுக்க தி.மு.க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று ஆந்திரா, கர்நாடகா, கேரள அரசுகள் மேற்கொள்ளும் தடுப்பணை கட்டும் பணியையும் தடுக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தவித தடுப்பணையும் கட்டப்படவில்லை. மேலும் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் அ.தி.மு.க வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். கோவையில் வாக்காளர்கள் இருமுறை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு முறையும் வாக்காளர் நீக்கம், வாக்குப்பதிவு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் சந்தேகம் நிலவுகிறது. அவ்வப்போது வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாட்டில் சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.

    அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பலர் இருந்தனர்.

    Next Story
    ×