search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு வரவேற்பு
    X

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு வரவேற்பு

    • மத்திய அரசு வேலை வாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது புரட்சி கரமான திட்டம்.
    • ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டமே...

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களை அமர்த்துதல், மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த படாது, நீட்தேர்வு என்பது மாநில அரசின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் திட்டங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. மக்களுக்கு பயனுள்ள பல நல்ல அறிவிப்புகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்துள்ளதை தி.மு. கழகம் முழுமையாக வரவேற்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளிம்புநிலை மக்களின் உரிமையை மீட்கும் வாக்குறுதிகள் கொண்டதாக இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளதை பாராட்டுகிறேன்.

    மத்திய அரசு வேலை வாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது புரட்சி கரமான திட்டம். இது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    எஸ்.சி., எஸ்.டி. காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் பா.ஜ.க. முடக்கி வைத்துள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் உயர்சாதி பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை மாற்றி அனைத்து சமூகத்திலும் உள்ள நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன். இதன் மூலம் ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டு பிரிவினர் பயன் அடைவார்கள்.

    நீட் தேர்வு முறையை மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாக்குறுதி தமிழ்நாட்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இது தமிழக மக்களின் உணர்வுகளை, உரிமைகளை மதிப்பதாக உள்ளன. மத்திய கல்வி கொள்கை மாற்றி அமைக்கப்படுவது, ஒப்பந்த நடைறை முற்றிலும் ஒழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து இருப்பது வரவேற்க கூடியது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-

    அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. ரெயில்வே துறையில் பா.ஜனதா ஆட்சி யில் மக்களை சுரண்டும் பல்வேறு செயல்கள் நடந்துள்ளன. முதியோர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை முழுமையாக ரத்து செய்திருந்தனர்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மீண்டும் முதியோர்களுக்கு சலுகை அளிக்கப்படும் என்று கூறியிருப்பது பயன் அளிக்கும். ரெயில்வேயில் அரை டிக்கெட் என்பதையே இல்லாமல் செய்துவிட்டனர். பொது பெட்டி யை குறைத்து குளிர்சாதன பெட்டியை அதிகமாக்கி கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

    கொரோனா காலத்தில் சிறப்பு ரெயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் இப்போதும் அப்படியே உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகி இருப்பது வரவேற்கத்தக்கது.

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டமே... சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். இப்படி பல நல்ல விஷயங்களை காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது வரவேற்கக் கூடியதுதான்.

    Next Story
    ×