search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழை எதிரொலி: சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பு
    X

    தொடர் மழை எதிரொலி: சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பு

    • குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன்காரணமாக 35 அடி உயரம் உள்ள பூண்டி ஏரியில் நீர் இருப்பு 34 அடியை எட்டியது. இதேபோல் 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 அடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 9817 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 83 சதவீதம் ஆகும்.

    இந்த தண்ணீரை சென்னை குடிநீருக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு சப்ளை செய்யமுடியும். பருவமழை தொடங்குவதற்கு முன்பே குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் ஏரிகளில் சோழவரம் ஏரியில் மட்டும் 50 சதவீதத்துக்கு கீழ் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. சிறிய ஏரியான கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி 96 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி.இதில் 2430மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081மி.கனஅடி. இதில் 498மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 22 கனஅடி தண்ணீர் வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3123 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 156 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. உபரி நீராக 100 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 237 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் 2589 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கனஅடி தண்ணீர் வருகிறது. 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 480 மி.கனஅடி நீர் நிரம்பி காணப்படுகிறது.

    Next Story
    ×