search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ் திருநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    கிறிஸ்துமஸ் திருநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • “கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை.”
    • தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    "கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை." "நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்."-என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்!

    கிறித்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர். அவர்களுள் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால், "தமிழ் மாணவன்" என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு.போப், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைத்து, தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகராதி தந்து, "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், தமிழ் நாட்டிற்கு அச்சு எந்திரத்தை முதன்முதல் கொண்டு வந்து தமிழ்நூல்கள் அனைத்தும் அச்சு வடிவம் கொள்ளத் துணைபுரிந்த சீகன் பால்கு ஐயர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை.

    இதில் பல பெருமக்களுக்கெல்லாம் நன்றியுணர்வோடு, சிலைகள் நிறுவி மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நின்று நிலவச் செய்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவி டர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.

    அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×