search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
    X

    சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    • 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன
    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    மேலும் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்கள் வென்றதற்காக 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான 8 சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், 4 பயிற்றுநர்கள், 4 உடற்பயிற்சி இயக்குநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் 3 நடுவர்கள் என மொத்தம் 19 நபர்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளையும், விருதிற்கான ஊக்கத் தொகையாக ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

    விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விவரங்கள், தகவல்கள், புகார்கள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்திட தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஆடுகளம்" தகவல் மையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    இந்த தகவல் மையம் காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். இதுதொடர்பாக 9514000777 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வசதி மூலமாகவும், ஆடுகளம் ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் நேரடியாகவும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம்.

    முதற்கட்டமாக கபடி போட்டிக்கான முன்பதிவு பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் பிரிவு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் வகையில் பதிவு தொடங்கப்படுகிறது.

    படிப்படியாக தடகளம், கூடைப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான முன்பதிவும் தொடங்கும்.

    விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவ. வீ. மெய்யநாதன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×