என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பா.ஜ.க. கொடியேற்ற வந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் கொடிக்கம்பம் நட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
- திண்டுக்கல் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- பா.ஜ.க.வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல்:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு இருந்த அக்கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்த கம்பத்தை மீண்டும் நடுவதற்கு முயன்றபோது போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 1400 இடங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் ஊன்றப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொடிக்கம்பம் நடக்கூடாது என தெரிவித்தனர்.
ஏற்கனவே இருந்த கம்பத்தில் கொடியேற்ற வந்துள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்த போதும் போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதும் பா.ஜ.க.வினர் அங்கிருந்து செல்லாமல் கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பா.ஜ.க.வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தனபாலன், போஸ், இளைஞரணி அன்புஹரிகரன், நிர்வாகிகள் மல்லிகா, இளையராஜா, மகேஷ், சதீஸ்குமார், முத்துக்குமார், ஆனந்தி, மணிகண்டன் உள்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.






