search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை- தாயாரிடம் போலீசார் விசாரணை
    X

    சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி

    பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை- தாயாரிடம் போலீசார் விசாரணை

    • இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
    • மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (23). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

    இசக்கியம்மாளுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சவாரிக்காக ஆட்டோவில் சேரன்மகாதேவி சென்று விட்டார்.

    இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர் தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை மாயமானது பற்றி தகவல் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஆட்டோ ஓட்டி சென்ற ரமேஷ் சேரன்மகாதேவி அருகே சென்றபோது விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் அவர் அந்த வழியாக வந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

    குழந்தையை காணவில்லை என்றதும் அவரும் பதறியபடி வீட்டிற்கு வந்தார். உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையை தேடினர். இதனிடையே மாயமான குழந்தை ஊர் கிணற்றில் சடலமாக மிதந்தது. இதைக்கண்ட உறவினர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

    இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் குழந்தையின் தாயான இசக்கியம்மாளே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    ஏற்கனவே இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையும் பிறந்து 20 நாட்களிலேயே தொட்டிலில் பிணமாக கிடந்துள்ளது. இசக்கியம்மாளுக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    போலீசார் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் குழந்தையின் வீடு, அது சடலமாக கிடந்த கிணற்றையும் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×