என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் சிக்கிய ஆட்டோ மற்றும் வேனை காணலாம்.
ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
- விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
- சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 35). இவர் நேற்று முன்தினம் வேறு ஒரு நபரிடம் இருந்து லோடு ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கினார்.
அந்த ஆட்டோவில் இருந்த சிறு சிறு பழுதுகளை சரி செய்வதற்காக நேற்று அவர் ஆட்டோவை நெல்லைக்கு ஓட்டி வந்தார். அப்போது அவர் அதே ஊரை சேர்ந்த வேலுமயில்(46) என்பவரையும் உடன் அழைத்து வந்தார். ஒர்க்ஷாப்பில் வேலைகள் முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது.
அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு நெல்லையில் இருந்து வெள்ளூருக்கு இரவில் புறப்பட்டு சென்றனர். ஆட்டோவை ராமச்சந்திரன் ஓட்டிச்சென்றார். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரத்தை அடுத்த ஆச்சிமடம் அருகே குளத்துகரை அருகே அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த வேன் எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் ஓட்டி வந்த ஆட்டோவின் மீது நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த இடிபாட்டில் சிக்கி ராமச்சந்திரனும், வேல்மயிலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். இடிபாட்டியில் சிக்கியிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்த சில மணி நேரங்களில் வேல்மயிலும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மானூர் அருகே பள்ளமடையை சேர்ந்த டிரைவர் அண்ணாவி முத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






