என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கைது செய்யப்பட்ட முத்து.
பட்டா கத்தியுடன் உலா வந்த ஈரோடு வாலிபர் கைது- கள்ளக்காதலியை சந்திக்க வந்தபோது சிக்கினார்
- போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
- பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் பட்டா கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் தகவலின் பேரில், பரமத்திவேலுார் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதுபோதையில் பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த முத்து (வயது 32) என்பதும், தற்போது சமையல் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இவர் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணை, சில நாட்களாக முத்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததால், அந்த பெண்ணை பார்ப்பதற்காக நேற்று பரமத்திவேலூருக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய பட்டா கத்தி மற்றும் ஒரு சிறிய கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முத்துவை கைது செய்த போலீசார், எதற்காக அவர் பட்டாக் கத்தியுடன் பரமத்திவேலூர் வந்தார்? தொடர்ந்து போன் செய்தும், அந்த பெண் போனை எடுக்காததால் அவரை கொலை செய்ய கத்தியுடன் வந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதை தொடர்த்து கைது செய்யப்பட்ட வாலிபரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






