என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
- தமிழக அரசையும், போலீசாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
- கவர்னர் மாளிகை முன் கண்காணிக்க முடியவில்லை என்றால் சிறு நகரத்தில் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்.
ஈரோடு:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நடைபயணத்தை ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை சிவகிரியில் நடைபயணத்தை மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு நம்முடைய சரித்திரத்தில் நிகழாத வகையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் இதுபோல் யாரும் பார்த்ததில்லை.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்காவினோத்தை பிடித்து கொடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய அதே கருக்காவினோத் இன்று கவர்னர் மாளிகை வாசலில் வீசியுள்ளார். வழக்கம்போல் போல் போலீசார் புது காரணமாக நீட்டிற்கு எதிராக குண்டு வீசியதாக கூறுகின்றனர்.
கருக்கா வினோத்திற்கு இது புதிதல்ல. உளவுத்துறை எந்த அளவிற்கு கோட்டை விட்டுள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. கொடிக்கம்பத்தின் மீது முனைப்பு காட்டும் போலீசார், சமூக வலைத்தளங்களில் பணியாற்றுபவர்களை கைது செய்யும் போலீசார் கருக்காவினோத் தொடர்ந்து இதே சம்பவங்களை செய்து கொண்டிருப்பதை கண்காணிக்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசையும், போலீசாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இனி தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என கடவுளை மட்டுமே வேண்டிக்கொள்ள வேண்டும். அது மட்டும் தான் நம் கையில் உள்ளது. முதலமைச்சர் இப்போதாவது கண் விழித்துக்கொண்டு போலீசாருக்கு அதிகாரத்தை கொடுத்து இதுபோன்ற குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பாரா என்ற கேள்வியை மக்கள் கேட்பது போல் நானும் கேட்கிறேன்.
மறுபடியும் கருக்காவினோத் 6 மாதங்களுக்கு பிறகு எங்கு கொண்டு போடுவார் என்று பெட்டிங் தான் கட்ட வேண்டும். செயலிழந்து இருக்கும் போலீசாரின் பூட்டை அவிழ்த்து தி.மு.க. அரசு சாமானிய மக்களுக்கு நம்பிக்கையையும், மரியாதையும் வரும் அளவிற்கு போலீஸ் துறையை கொண்டு வர வேண்டும்.
ஜனாதிபதி வரவுள்ள நிலையில் இது சென்சிடிவ் விஷயம். கவர்னர் மாளிகை முன் கண்காணிக்க முடியவில்லை என்றால் சிறு நகரத்தில் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பது இச்சம்பவம் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அண்ணாமலை சிவகிரியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பொய்யை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். உலகத்தில் 80 சதவீதம் மஞ்சள் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்திலும், முதல் இடத்தில் நிசாமாபாத்தும் மஞ்சள் உற்பத்தி செய்கின்றன.
நிசாமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைந்துள்ளது. இதன் பிராந்திய அலுவலகம் ஈரோட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சுய ஒழுக்கம் உள்ள நேர்மையான தலைவர் பிரதமர் மோடி. பல பேருக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு ஜீரோ மார்க்கை விட மைனஸ் மார்க் தான் போட வேண்டும். 1.50 கோடி தொண்டர்கள் கொண்ட தி.மு.க. 8 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
அமைச்சர் உதயநிதி கையில் முட்டையை வைத்துக்கொண்டு மந்திரவாதி போல் செயல்பட்டு வருகிறார். இதனால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா.
இவ்வாறு அவர் பேசினார்.






