search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் மீண்டும் தேர்வு- பொதுக்குழுவில் தீர்மானம்
    X

    அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் மீண்டும் தேர்வு- பொதுக்குழுவில் தீர்மானம்

    • கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.
    • தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    போரூர்:

    சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதையொட்டி வானகரம் முழுவதும் அ.ம.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்கள், பேனர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.

    பொதுக்குழு கூட்டத்துக்கு அ.ம.மு.க.பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை வகித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் அழைப்பிதழுடன் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலாளர் ஜி. செந்தமிழன் முன்னிலை வகித்தார்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்வு செய்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தலைவராக கோபால், துணை தலைவராக முன்னாள் எம்.பி.அன்பழகன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    பெரியார், அண்ணா எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லும் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    கழக மாணவர் அணி, மாணவியர் அணி உருவாக்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலப்பிரிவில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கழகத்தின் 6-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றுதல், குக்கர் சின்னம் வரைந்து விளம்பரப்படுத்துதல், மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குதல் மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து பிரசாரங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காகக் கையாள்வதற்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும் தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மற்றும் சுங்கக் கட்டணத்தைக் குறைத்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டிட வலியுறுத்தல், விவசாயத்தைப் பாதிக்கும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையும், என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்தையும் கைவிடுக என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன்,சி.ஆர்.சரஸ்வதி, அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன், மாவட்ட செயலாளர்கள் வி.சுகுமார்பாபு, அம்பத்தூர் எஸ்.வேதாச்சலம், திருவள்ளூர் லக்கிமுருகன், சி.பி.ராமஜெயம், ஏ.ஆர்.பழனி, பி.ஆனந்தன், முகமது சித்திக், கே.விதுபாலன் மற்றும் நிர்வாகிகள் கிரித ரன், நசீர்கான் தட்சிணா மூர்த்தி, குட்வில்குமார், எஸ்.கே.கோவிந்தசாமி, பி.விஜயகுமார், புதூர் எம்.சரவணன், எஸ்.செல்வன், எஸ்.வெங்கடேசன், எஸ்.மூர்த்தி, வி.ஜே.குமார், டி.சக்கரபாணி, முகவை ஜெயராமன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×