search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்ப 6000 பஸ்கள் இயக்கம்
    X

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்ப 6000 பஸ்கள் இயக்கம்

    • சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
    • பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு போனதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் காலையில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள்.

    பகல் நேர ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து இரவுக்குள் வீடு வந்து சேர திட்டமிட்டு உள்ளனர். அரசு பஸ், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்குகின்றனர்.

    இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.

    வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பஸ்கள் மற்றும் 2000 சிறப்பு பஸ்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    அதேபோல 1800 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரம் பஸ்கள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அதிகாலையில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கும். அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    அரசு பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.


    நாளை (18-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் இன்று இரவுக்குள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் வந்தே பாரத், துரந்தோ, உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை அனைத்து அரசு அலுவல் பணிகளும் தொடங்குவதால் விடுமுறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர். ஒரு சிலர் மேலும் 2 நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு அதாவது 18, 19 விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் விடுமுறையிலும் இருக்கிறார்கள்.

    சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று பயணம் மேற்கொள்வதால் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களை விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×