search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலை
    X
    கொலை

    தம்பி மனைவியுடன் தகாத உறவு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரிசி வியாபாரி வெட்டிக்கொலை

    கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அரிசி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை

    கோவை அருகே உள்ள மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (வயது 37).

    இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம். வியாபாரத்துக்காக வேலாந்தவளம் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் அரிசி குடோனுக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராமநாதன் புறப்பட்டுச் சென்றார்.

    குடோனுக்கு சென்ற ராமநாதன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராமநாதன் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதியினர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து ராமநாதனின் மனைவி ராஜேஸ்வரியும் அங்கு வந்தார். அவர் கொல்லப்பட்டு பிணமாக கிடந்த கணவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    போலீசார் ராமநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ராமநாதனை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணையை முடுக்கி விட்டனர்.

    அரிசி வியாபாரம் செய்து வந்த ராமநாதனுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழில் போட்டியில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

    தொடர்ந்து நேற்று ராமநாதன் குடோனுக்கு வந்த பின் அவரை சந்திக்க யாரெல்லாம் வந்தனர் என்பது பற்றி அந்த பகுதியினரிடம் விசாரித்தனர். அப்போது ராமநாதனின் பெரியப்பா மகனும், தம்பி முறை உடையவருமான முருகன் (35) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது.

    மதுரையைச் சேர்ந்த முருகன், திடீரென குடோனுக்கு வந்து ராமநாதனை சந்தித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் முருகனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர் தான் சகோதரர் என்றும் பாராமல் ராமநாதனை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முருகனின் மனைவியுடன் ராமநாதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த முருகனும், உறவினர்களும் ராமநாதனை கண்டித்துள்ளனர். தம்பி மனைவியுடனான தொடர்பை துண்டிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் ராமநாதன், தம்பி மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், மதுரையில் இருந்து கோவைக்கு வந்து திட்டமிட்டு ராமநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த தகவல்களை முருகன், போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராமநாதன் கொலையில் முருகனை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×