என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றி திரிந்த கரடி.
    X
    குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றி திரிந்த கரடி.

    குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளின் கதவை தட்டிய கரடி

    ஊட்டி அருகே ஜெகதளா கிராமத்தில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. அவ்வாறு வரும் விலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    ஊட்டி அருகே ஜெகதளா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.

    நீண்ட நேரமாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்த கரடி அங்குள்ள மளிகை கடையை தட்டியது. மேலும் சில வீடுகளின் கதவின் அருகே சென்று கதவையும் தட்டியது.

    வீடுகளின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தனர். அப்போது வாசலில் கரடி நின்றிருந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.

    1 மணி நேரத்திற்கு மேலாக சுற்றி திரிந்த கரடி பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. இதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே கூடலூர் பகுதியில் சாலையோரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் சுற்றி வரும் யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனயே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

    வனத்துறையினரும் அந்த பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து யானை சாலைக்கு வராத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×