search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைதானவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டரை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டரை படத்தில் காணலாம்.

    பட்டதாரி பெண்ணிடம் ஆன்லைனில் பண மோசடி செய்த 2 பேர் கைது

    ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). பட்டதாரி பெண்ணான இவர் ஆண்டிராய்டு செல்போன் உபயோகித்து வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தொடர்பான இணைய தளங்களையும் அடிக்கடி தொடர்பு கொண்டு பல்வேறு பதிவுகளையும் அளித்துள்ளார்.

    இந்தநிலையில் ஆன்லைன் மூலம் குறைந்த முதலீட்டில் கை நிறைய சம்பாதிக்கலாம் என அவரது கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த சிவரஞ்சனி முதலில் சோதனை அடிப்படையில் ரூ.500 செலுத்தியுள்ளார். அதிலிருந்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.700 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய அவர் தொடர்ந்து வருகிற குறுந்தகவல்களுக்கு பதிலளித்து அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தி வந்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் செலுத்திய நிலையில் தனது வங்கி கணக்கிற்கு வருமானம் வராததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, கவர்ச்சிகரமான அறிவிப்பை கொடுத்து மணமேல்குடி பட்டதாரி பெண்ணிடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 900 மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த காளிமுத்து (28), மன்னவன் (26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்படவில்லை. மாறாக 2 விலை உயர்ந்த செல்போன்கள், 1 கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் யார், யாரிடமெல்லாம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் முக்கிய குற்றவாளியான சோமசுந்தரம் என்பவர் துபாயில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை தமிழகம் வரவைத்து கைது செய்யவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் குறித்து காவல்துறையினர் அறிவுறுத்தல் உள்ளிட்ட பல வகையில் அறிவிப்புகள் வெளிவந்தாலும் இவ்வாறு ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.

    எனவே பொதுமக்கள் ஆன்லைனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×