search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    சொத்துவரி உயர்வை கண்டித்து வரும் 8ந் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

    சென்னையில் நடைபெறும் பாஜக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. கொரோனா பாதிப்பு காலம் முடிந்து இப்போது தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் உள்ளாட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் புதிதாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சித் தலைவர்கள், மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள். அவரவர் பகுதிகளை தூய்மையாக பராமரித்து கல்வி சுகாதார திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி சாலைகளை சீரமைத்து மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்கள் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். 

    ஆனால் கண்களை மூடிக்கொண்டு தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது அதிகபட்சமாக மக்கள் விரோத போக்காகும்.

    இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். சொந்த தொழில் செய்வோர். வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விட்டு இருப்பவர்கள், என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 8-ந் தேதி காலை 11 மணி அளவில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி, டாக்டர் சரஸ்வதி, கட்சியின் துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர் ஆகியோரும், செங்கல்பட்டில் கரு.நாகராஜனும், ஆவடியில் சுமதி வெங்கடேஷ், ஜே.லோகநாதன் கடலூரில் ஏ.ஜி.சம்பத், திருச்சியில் எம்.என்.ராஜா, வேலூரில் கே.எஸ்.நரேந்திரன், ஓசூரில் ஜி.கே.நாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    சேலத்தில் கே.பி.ராமலிங்கம், ஈரோட்டில் ஜி.கே.செல்வகுமார், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூரில் வினோஜ் பி.செல்வம், திண்டுக்கல்லில் எஸ்.ஆர்.சேகர், மதுரையில் பொன்.பாலகணபதி, சிவகாசியில் ஏ.ஆர்.மகாலட்சுமி, நெல்லையில் சசிகலா புஷ்பா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

     நாகர்கோவிலில் பேராசிரியர் சீனிவாசன், தூத்துக்குடியில் சுப.நாகராஜன், தஞ்சாவூரில் டாக்டர் சிவசுப்பிரமணியம், கும்பகோணத்தில் புரட்சி கவிதாசன், கரூரில் மீனாட்சி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×