search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்கள் குவிகிறது

    14417 இலவச உதவி மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது. பாலியல் சார்ந்த புகார்கள் அதிகளவு வருகின்றன.
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறையில் மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் மற்ற ஆலோசனைகளை வழங்குவதற்காக 2018-ல் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது.

    இந்த மையத்தை 14417 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலம் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். தனியார் பள்ளிகள் மீதான கல்வி கட்டண புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோவையில் பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 14417 என்ற எண்ணில் தயக்கமின்றி தெரிவிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

    அதன்பிறகு உதவி மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்தது. பாலியல் சார்ந்த புகார்கள் அதிகளவு வருகின்றன. இந்த மையத்துக்கு வரும் பாலியல் புகார்களை கையாள்வதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது.

    இதுகுறித்து கல்வி வழிகாட்டி மைய ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது:-

    அமைச்சரின் அறிவிப்புக்கு முன்பு தினமும் 150 முதல் 200 அழைப்புகள் வரை வரும். அவை பெரும்பாலும் உயர்கல்வி குறித்த சந்தேகங்கள், பொதுத்தேர்வு குறித்த அச்சம் என கல்வி சார்ந்தவைகளாக இருக்கும். சில அழைப்புகள் மட்டுமே கல்வி கட்டண முறைகேடு போன்றவையாக இருக்கும்.

    ஆனால் சில நாட்களாக உதவி மையத்துக்கு தினமும் 500 முதல் 550 அழைப்புகள் வரை வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் பாலியல் புகார்கள் மற்றும் அது தொடர்புடையதாகவே உள்ளன.

    வழக்கமாக மையத்தில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படும். உளவியல் பாதிப்புகள் மனநல நிபுணர் மூலம் சரி செய்யப்படும். பள்ளிகள் மீதான புகார்கள் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் பாலியல் புகார்கள் குறித்த வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படவில்லை. இதனால் இவற்றை கையாள முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள். இதன் காரணமாக நிறைய புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    சில மாணவிகள் தெரிவிக்கும் பாலியல் சம்பவங்கள் மிக மோசமானவை. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையில் இருப்பது எங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×