search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணையின் தோற்றம்.
    X
    கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணையின் தோற்றம்.

    69 அடியை நெருங்கிய நீர்மட்டம்: வைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை 68.50 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்த மழை காரணமாகவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கூடுதல் தண்ணீர் காரணமாகவும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    நேற்று முன்தினம் அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டிய நிலையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை அணையின் நீர் மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது.

    இதனையடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2753 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 500 கன அடி, மதுரை குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர் மட்டம் 69 அடியை தொட்டவுடன் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவோ வேண்டாம் என தண்டோரா மூலமும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க போதுமான ஏற்பாடுகளையும், பேரிடர் மீட்பு தகவல்களை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளனர்.

    வைகை அணை நீர் மட்டம் 69 அடியை நெருங்கி வருவதால் 58-ம் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 32 கி.மீ தொலைவிலுள்ள கிராமங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் 58-ம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது.

    அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டும் போது 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் வெளியேறும்படி மதகு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி, மே மற்றும் ஜூலை மாதங்களில் வைகை அணை நீர் மட்டம் 67 அடியை கடந்தது. ஆனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 66 அடிக்கும் கீழ் சென்றது. எனவே 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது 68.50 அடியை எட்டியுள்ளதால் 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 110 கிராமங்கள் பயன்பெறும். 33 கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீரும் உயரும் என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×