search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி- ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி என எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் நாள்தோறும் நீலகிரிக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    தற்போது விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கார், வேன், மோட்டார் சைக்கிள், பஸ்கள் மூலம் நீலகிரிக்கு வந்தனர்.

    அவர்கள் மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, பர்லியார் தோட்டக்கலை பண்ணை, ரோஜா பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் போன்றவற்றை குடும்பத்துடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மலர் மாடங்களிலும் மலர் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்கார படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் படகில் சென்று ஏரியின் அழகையும், இயற்கை காட்சியையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா வந்தவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தியதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததாலும் ஊட்டி சேரிங்கிராஸ், தொட்டபெட்டா செல்லும் சாலை, கோத்தகிரி சாலை, குன்னூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவிற்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதுதவிர ரோஜா பூங்காவுக்கு 1,604 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 350 பேரும், மரவியல் பூங்காவுக்கு 83 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,379 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 350 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 142 பேரும் வந்திருந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்துக்கு 3,200 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 2,000 பேரும் வருகை தந்திருந்தனர்.
    Next Story
    ×