search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் ஜெயிலில் நளினியை சந்திக்க அனுமதிக்க கோரி முருகன் மனு

    வேலூர் ஜெயிலில் உள்ள நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என ஜெயில் சூப்பிரண்டிடம் முருகன் மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுபடி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்தனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முருகன் நளினி நேரடி சந்திப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இருவரும் செல்போனில் வீடியோ கால் மூலம் பேச அனுமதி அளித்தனர்.

    இதற்கிடையே முருகன் வேலூர் ஜெயிலில் இருந்து அனுமதி இன்றி வெளிநாட்டில் உள்ள அவருடைய உறவினர்களிடம் பேச முயன்றார். இதனை தடுத்து நிறுத்திய சிறைக்காவலர்கள் முருகன் மீது அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இதனால் முருகன் நளினியுடன் செல்போனில் பேச தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து முருகன் 25 நாட்களுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் அறிவுரையை ஏற்று முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனுக்கு ஜெயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது ஜெயில் கைதிகள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் மனு அளித்துள்ளார். அதில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நளினியுடன் நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×