என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது 4 பெண்கள் உள்பட 17 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 17 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் (28) என்பவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 18 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 18 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×