என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பு
    X
    பள்ளிகள் திறப்பு

    பள்ளிகளை திறக்க வழிகாட்டி நெறிமுறைகள்- கல்வித்துறை வெளியீடு

    பள்ளிகளை திறப்பதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது 9, 10, 11, 12-ம் வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒரு நாள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணிவரை செயல்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் வந்து, பாடத்தில் உள்ள சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளும் செயல்பட கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வகுப்புகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் நண் பகல் 1 மணிவரை செயல்படும். மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கட்டாயமில்லை. மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடனே வகுப்புகளுக்கு வரவேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கிருமி நாசினி கொண்டு கை கழுவுவது அவசியமாகும்.

    ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிகபட்சமாக 20 மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர அனுமதிக்கலாம். 1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பாடவேளையும் 45 நிமிடங்களாக பிரிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிக்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டும்.

    இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×