search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் கொலை
    X
    மாணவர் கொலை

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர் கொலை- போலீசார் விசாரணை

    கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும்போது ஏற்பட்ட மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 172 தங்கி படித்து வருகின்றனர்.

    இங்கு பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஆதித்யா ‌ஷர்மா (வயது20) என்பவர் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை விடுதியில் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் மாணவர் ஆதித்யா ‌ஷர்மாவின் கழுத்தில் பிளாஸ்டிக் நாற்காலியின் கால் பகுதியை மாணவர் சிலர் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    உடனடியாக மற்ற மாணவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்யா ‌ஷர்மா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு (திருவள்ளூர் பொறுப்பு) சண்முகப்பிரியா மற்றும் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் சோபாதேவி, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாணவர் ஆதித்யா ‌ஷர்மாவை தாக்கியவர்கள் யார் என்றுதெரியவில்லை. இதையடுத்து விடுதியில் தங்கி உள்ள அனைத்து மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    கல்லூரியில் விடுதியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும்போது ஏற்பட்ட மோதலில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×