என் மலர்
செய்திகள்

9 மாதத்துக்கு பிறகு கொடிவேரி அணை நாளை திறப்பு
கோபி:
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்களில் பிரசித்து பெற்று திகழ்ந்து வருகிறது.
இந்த அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் பஸ், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள்.
அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். மேலும் மக்கள் கொண்டு வரும் உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணை 9 மாதங்களுக்கு பிறகு நாளை (திங்கட் கிழமை) முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அணையை சுற்றி பார்க்கவும், குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள், மக்கள் மற்றும் அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






